மதுரை: விஜய் முதலில் களத்திற்கு வரவேண்டும். செய்தியாளர்களை சந்தித்து கருத்தை கூறவேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். மதுரை, கூடல் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் தேமுதிகவின் பூத் முகவர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். கூட்டத்தில், 2026 சட்டமன்ற தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் பிரேமலதா போட்டியிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
தொடர்ந்து, பிரேமலதா அளித்த பேட்டி: ஜனவரி 9ல் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’ கடலூரில் நடத்தப்பட உள்ளது. இதற்கான கால்கோள் நடப்பட்டு கவுன்ட்-டவுன் துவங்கியுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியில் என்ன நடக்கப் போகிறது என்பதை யாரும் கணிக்க முடியாது. தேர்தலுக்கு பின்பு எது வேண்டுமானாலும் நடக்கலாம். தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது ஜனவரியில் அறிவிக்கப்படும். முதலில் விஜய் களத்திற்கு வரவேண்டும். அவர் இன்னும் ஏராளமான பணிகளை செய்யவேண்டும்.
விஜய் பற்றி நீங்கள் எத்தனை முறை கேட்டாலும் என்னுடைய பதில் இது ஒன்று தான். நாங்கள் பலமுறை செய்தியாளர்களை சந்திக்கிறோம். ஆனால், அவர்கள் சந்திப்பதில்லை. கருத்தை தெரிவிப்பதில்லை. அவர்கள் சந்தித்து அவர்களது கருத்தை கூறட்டும். அவர்களுக்காக நாங்கள் பேச வேண்டிய அவசியம் இல்லை. தேமுதிக அதற்கான கட்சி இல்லை. பாஜ மட்டுமின்றி எந்தவொரு கட்சியுடனும் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. இவ்வாறு கூறினார்.


