Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

களக்காடு அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் புதர்மண்டி காடாக மாறிய பச்சையாறு

களக்காடு : களக்காடு மேற்குத்தொடர்ச்சி மலையில் அடர் வனப்பகுதியில் பச்சையாறு உற்பத்தி ஆகிறது. சிறிய ஓடை போல் உற்பத்தியாகும் பச்சையாறு வரும் வழிகளில் ஆறாக மாறி பாய்ந்தோடுகிறது. மஞ்சுவிளை, வடகரை, பத்மநேரி, தேவநல்லூர், சிங்கிகுளம் வழியாக ஓடி தருவை வழியாக சென்று தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது.

இந்த ஆற்றின் மூலம் நாங்குநேரி தாலுகாவில் உள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பல்வேறு குளங்களுக்கும் பச்சையாற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும் நாங்குநேரி தாலுகாவின் முக்கிய நிலத்தடி நீராதாரமாகவும், மேய்ச்சல் கால்நடைகளின் குடிநீர் ஆதாரமாகவும் பச்சையாறு திகழ்கிறது.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக பச்சையாற்றில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆறு தூர்வாரப்படாததால் ஆற்றில் மணல் திட்டுகள் உருவாகியுள்ளன. அமலைச்செடிகள் ஆக்கிரமித்துள்ளன.

மேலும் செடி, கொடிகள் அடர்ந்து புதர்மண்டியுள்ளன. ஆற்றின் நடுவில் நீராதாரத்தை அழிக்கும் சீமைக் கருவேல மரங்கள் காடுபோல வளர்ந்து நிற்கின்றன. இதனால் ஆற்றில் நீரோட்டம் தடைபடுவதாக புகார் கூறப்படுகிறது.

மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது, ஆற்றில் தண்ணீர் செல்ல வழியின்றி கரைகளில் உடைப்பு ஏற்பட்டு, கரையோர கிராமங்களுக்குள் வெள்ளம் புகுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். குறிப்பாக பத்மநேரி பாலத்தில் இருந்து முக்கூடலிங்க சாஸ்தா கோயில் வரையுள்ள ஆற்றுப்பகுதி புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த புதர்களில் தஞ்சமடைந்துள்ள பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் கரையோரங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உலா வந்து பொதுமக்களை அச்சுறுத்துகின்றன.

இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்பதால் பச்சையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து, உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் பச்சையாற்றின் பல்வேறு இடங்களில் சாக்கடை கழிவுநீர் நேரடியாகவும் கலக்கிறது.

குப்பைகளும், பிளாஸ்டிக் கழிவுகளும் கரையோரங்களில் கொட்டப்படுவதால் பச்சையாறு பகுதியில் பல்வேறு இடங்களில் சுகாதார சீர்கேடு நிலவுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே புதர்மண்டிய பச்சையாற்றை தூர்வார உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.