Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கலைஞர் பல்கலைக்கழகம் விவகாரம் ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

புதுடெல்லி: கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி உள்ளார். இதனை, எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது. தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழக வேந்தர் உள்பட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்க மறுத்த நிலையில், உச்சநீதிமன்றம் அந்த மசோதாக்களுக்கு அனுமதி வழங்கியது. இது விவாதங்களை ஏற்படுத்தியது.

இதையடுத்து, குடியரசு தலைவர் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி, விளக்கம் கோரியிருக்கிறார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை முடிவடைந்து, தீர்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில், தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைப்பெற்ற கூட்டத்தொடரில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி பேசினார். அப்போது,‘தமிழ்நாட்டில் எளிய மக்களின் துயர் துடைத்தவர் கலைஞர். அவரது பெயரில் தமிழகத்தில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்,’என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு, அதிமுக, பாஜ தவிர காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட மற்றக்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

இதையடுத்து, மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பெயரிடப்பட்ட ‘கலைஞர் பல்கலைக்கழகம்’ கும்பகோணத்தில் நிறுவப்படும் என்று அன்றைய தினமே முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரும்பாலான மாநில நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்களைப் போலவே, இந்த பல்கலைக்கழகத்திற்கும் முதல்வரே வேந்தராக இருப்பார் என்றும், ஆளுநர் வேந்தராக இருக்க மாட்டார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.அரசு நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரங்களை ஆளுநரிடமிருந்து அரசுக்கு மாற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, திமுக அரசால் நிறுவப்படும் முதல் பல்கலைக்கழகம் இதுவாகும்.

இதையடுத்து, இந்த மசோதா ஆளுநர் ஆர்.என். ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஒப்புதல் அளிக்காமல் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ஆகஸ்டு முதல் வாரத்தில் அனுப்பி வைத்தார். ஆனால், அந்த மசோதா மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த நடவடிக்கையை எதிர்த்தும், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்ததை ரத்து செய்யக்கோரியும் தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்குரைஞர் மிஷா ரோத்தகி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 1ம் தேதி ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.