கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் நலிந்தோர், மருத்துவ உதவி நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் என ரூ.2 லட்சத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாய் வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையை கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வருகிறது.
வைப்பு நிதியாக போடப்பட்ட 5 கோடி ரூபாயில், 30வது புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்து கலைஞர் பேசுகையில், கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். அச்சங்கத்துக்கு வழங்கியது போக மீதமுள்ள நான்கு கோடி ரூபாயிலிருந்து வரும் வட்டித் தொகையில் 2007ம் ஆண்டு முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது. 2005ம் ஆண்டு முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.6 கோடியே 33 லட்சத்து 90 ஆயிரம். அந்த வகையில் இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2,00,000 (இரண்டு லட்சம்) நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது.