*சிஇஓ நேரில் விசாரணை
கடத்தூர் : கடத்தூர் அருகே அரசுப்பள்ளியில், சாதி ரீதியான மோதல் போக்கை கடைபிடித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் இரவு வரை நீடித்த நிலையில், சிஇஓ நேரில் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட புட்டிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில், 5 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 10 முதுநிலை ஆசிரியர்கள், தலைமையாசிரியர் உள்பட 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் இருவேறு சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அவர்கள் சாதி ரீதியாக திட்டி வருவதால் மாணவர்கள் மன உளைச்சலுக்குள்ளாகி வருவதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், பள்ளியில் நேற்று நடைபெற்ற மேலாண்மை குழு கூட்டத்தில், ஆசிரியர்களின் சாதி ரீதியான பாகுபாடு குறித்து பெற்றோர் அடுக்கடுக்காக புகார்களை தெரிவித்தனர். இதனால், கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கேள்வி எழுப்பி, தலைமை ஆசிரியரிடம் பெற்றோர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மாணவர்களை சாதி ரீதியாக திட்டிய ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளி வளாகத்தில் பெற்றோர் போராட்டத்தில் குதித்தனர். இரவு 7 மணியை தாண்டியும் போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்த தகவலின்பேரில், கல்வித்துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, இரவு 8 மணியளவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதிசந்திரா பள்ளிக்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சாதியை கூறி திட்டியதாக கூறப்படும் 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் தனித்தனியே அழைத்து விசாரணை நடத்தி, ஆசிரியர்கள் மீதான புகார்களை எழுத்துப்பூர்வமாக வாங்கினார். இதையடுத்து, புகார் மீது விசாரணைக்கு நாளை(இன்று) மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு வருமாறு 2 ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியருக்கு முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதன்பேரில், போராட்டத்தை கைவிட்டு பெற்றோர் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று மதியம் முதலே பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.