சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கு ‘கபீர் புரஸ்கார் விருது’பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான ‘கபீர் புரஸ்கார் விருது’ குடியரசு தின விழாவின்போது முதல்வரால் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்பு துறை மற்றும் அரசு பணியாளர்களின் சமுதாய நல்லிணக்க செயல், அவர்கள் ஆற்றும் அரசு பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் நீங்கலாக) இந்த விருதினை பெற தகுதியுடையவராவர். விருதானது ஒரு சாதி, இனம், வகுப்பை சார்ந்தவர்கள் பிற சாதி, இன, வகுப்பை சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்பு கலவரத்தின்போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாக தெரிகையில் அவரது உடல் மற்றும் மன வலிமையை பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.
விருது மூவருக்கு வழங்கப்படுகிறது. முறையே ரூ.20,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். 2026ம் ஆண்டு, குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீர் புரஸ்கார் விருதிற்கென தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே 15.12.2025 அன்று அல்லது அதற்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தெரிவு செய்யப்பட்டு, 26.1.2026 குடியரசு தினத்தன்று விருது வழங்கி கவுரவிக்கப்படுவர் என தமிழக அரசு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


