நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்றத்தில் புகார் கொடுத்த விவகாரம்: வக்கீல் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்மீது உச்சநீதிமன்றத்தில் புகார் அளித்த வழக்கறிஞர் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வருகிறார். சமூக பிரச்னைகள், கூடங்குளம் அணு உலை, மனித உரிமை மீறல், காவல் நிலைய மரணங்கள், அனைத்து சாதியினர் அர்ச்சகர் நியமனம், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஆஜராகியுள்ளார்.
தனது கோரிக்கை தொடர்பான பல்வேறு போராட்டங்களிலும் பங்கெடுத்துள்ளார். ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ராஜசேகர் ஆகியோரது அமர்வில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் வாஞ்சிநாதன் ஆஜராகி வந்தார். தற்போது வேறொரு வழக்கறிஞர் ஆஜராகி வருகிறார். இந்த வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நேரில் ஆஜராக வேண்டுமென நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று முன்தினம் பிற்பகலில் வாஞ்சிநாதன் ஆஜரானார்.
அப்போது அவரிடம், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘உங்களது நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நீங்கள் தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்புகள் குறித்தும், சாதிய ரீதியாக தீர்ப்புகள் வழங்குவதாகவும் என் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறிவருகிறீர்கள். இது குறித்து தங்களின் தற்போதைய நிலை என்னவென கூறுகிறீர்கள்’’ என்றார். அப்போது வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ‘‘குற்றச்சாட்டு எது என குறிப்பிட்டு கூறினால் பதிலளிக்கிறேன்’’ என கூறியுள்ளார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், வரும் 28ம் தேதி மதியம் 1.15 மணிக்கு இந்த நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராக வேண்டும். அப்போது எழுத்துப்பூர்வமான கேள்விகள் வழங்கப்படும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.