மதுரை: 14வது ஜூனியர் ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் சென்னை, மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்தியா உள்பட 24 அணிகள் கலந்து கொள்ளும் இப்போட்டியின் லீக் சுற்றுகள் முடிந்த நிலையில் ஏ பிரிவில் ஜெர்மனி, பி பிரிவில் இந்தியா, சி பிரிவில் அர்ஜெண்டினா, டி பிரிவில் ஸ்பெயின், இ பிரிவில் நெதர்லாந்து, எப் பிரிவில் பிரான்ஸ் அணிகள் முதலிடம் பிடித்து காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்த 6 அணிகளுடன் 2வது இடம் பிடித்த 2 சிறந்த அணிகளான நியூசிலாந்து, பெல்ஜியம் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. காலிறுதி போட்டிகள் இன்று சென்னையில் நடக்கிறது. இதில் இந்திய அணி பெல்ஜியத்துடனும், ஸ்பெயின் அணி நியூசிலாந்துடனும், ஜெர்மன் அணி பிரான்சுடனும், அர்ஜெஜ்டினா அணி நெதர்லாந்துடனும் மோத உள்ளன.
நேற்று 9 முதல் 24 வரையிலான தரவரிசை இடங்களுக்கான ஆட்டங்கள் மதுரை, சென்னையில் நடைபெற்றன. மதுரையில் காலை 9 மணியளவில் ஆஸ்திரியா, நமீபியா அணியினர் மோதினர். இதில் இரு அணியினரும் தலா இரு கோல் பெற்ற நிலையில், ஆஸ்திரியா அணி ஷூட் அவுட் முறையில் 2-0 கோல் கணக்கில் வென்றது. இரண்டாவதாக காலை 11.30 மணியளவில் வங்கதேசம், ஓமன் அணிகள் மோதின. இதில் வங்கதேசம் அணி 13-0 கோல் கணக்கில் வென்றது. மதியம் 1.30 மணியளவில் கொரியா, எகிப்து அணிகள் மோதின.
இதில், கொரியா 6-3 கோல் கணக்கில் வென்றது. பிற்பகல் 3.45 மணியளவில் கனடா, சீனா அணியினர் மோதினர். இதில் சீனா 3:2 என்ற கோல் கணக்கில் வென்றது. சென்னையில் பகல் 12.55 மணிக்கு நடந்த சிலி அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. தொடர்ந்து பிற்பகல் 3.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் மலேசியா அணியை தென் ஆப்ரிக்கா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. மாலை 5.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் அயர்லாந்து அணி 5-2 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை தோற்கடித்தது.

