Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நீதிமன்றங்களின் உத்தரவுகளை அமல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்: தமிழக தலைமை செயலாளருக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தலைமை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு துணை தாசில்தாரர் பதவி உயர்வுக்கான பட்டியலில் சேர்த்த தனது பெயரை 2006ம் ஆண்டு பட்டியலில் சேர்க்கக் கோரி வருவாய் துறையில் பணியாற்றிய ராஜாகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 12 வாரங்களில் 2006ம் ஆண்டு பட்டியலில் அவரது பெயரை சேர்க்குமாறும் உரிய பண பலன்களை அவருக்கு வழங்குமாறும் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி ராஜா குமார் தாக்கல் செய்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞரின் விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருந்ததற்கு தேர்தல் பணிகளை காரணமாக கூறக்கூடாது. பணப்பலன்கள் சொற்ப தொகை தான் வரும். அதை அமல்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளது. இதுபோல நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாமல் இருந்தால், நீதிமன்ற அவமதிப்பு செய்ததற்காக தண்டனை விதிப்பதை தவிர வேறு வழியில்லை.

இந்த வழக்கில் இரண்டு வாரங்களில் உத்தரவை அமல்படுத்தாவிட்டால் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த கால அவகாசம் கேட்கலாம். அல்லது உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம். இந்த இரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாவிட்டால் உத்தரவை அமல்படுத்தியே ஆக வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளரை அறிவுறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்கள் தள்ளிவைத்தனர்.