Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நகைக் கடையில் கொள்ளை முயற்சிமிளகாய் பொடி வீசிய பெண்ணுக்கு 20 வினாடிகளில் 17 முறை ‘பளார்’பாய்ந்து பிடித்து தர்மஅடி கொடுத்த உரிமையாளர்

அகமதாபாத்: மிளகாய்ப் பொடி தூவி கொள்ளையடிக்க முயன்ற பெண்ணுக்கு, கடை உரிமையாளர் தர்ம அடி கொடுத்த சம்பவம் அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ராணிப் பகுதியில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைக்கடைக்கு கடந்த 3ம் தேதி பெண் ஒருவர் வந்துள்ளார். தனது முகத்தை துப்பட்டாவால் மறைத்தபடி, வாடிக்கையாளர் போல கடைக்குள் நுழைந்த அவர், உரிமையாளரான சோனி என்பவரிடம் பேச்சு கொடுத்துள்ளார்.

திடீரென, தான் மறைத்து வைத்திருந்த மிளகாய்ப் பொடியை எடுத்து உரிமையாளரின் கண்களில் தூவி கொள்ளையடிக்க முயன்றுள்ளார். சுதாரித்துக்கொண்ட உரிமையாளர் சற்றே விலகியதால், மிளகாய்ப் பொடி முகத்தில் படுவதிலிருந்து தப்பினார். அடுத்த கணமே, தனது மேஜையைத் தாண்டி குதித்த உரிமையாளர், அந்தப் பெண்ணை கையும் களவுமாகப் பிடித்து சரமாரியாக அறைந்தார். சுமார் 20 வினாடிகளில் 17 முறை அவரை அறைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சி சம்பவம் முழுவதும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

உரிமையாளரிடம் இருந்து தப்பித்த அந்தப் பெண், எதுவும் கொள்ளையடிக்காமல் அங்கிருந்து தப்பியோடினார். இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க கடை உரிமையாளர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவியதை அடுத்து, பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ராணிப் பகுதி காவல்துறையினர் தாமாக முன்வந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, தப்பியோடிய பெண்ணை அடையாளம் கண்டு, அவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.