சென்னை: எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி படத்தின் 150வது நாள் விழா சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் நேற்று நடந்தது. விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று ரசிகர்களுடன் அமர்ந்து இதயக்கனி படத்தை பார்த்தார். பின்னர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ”தமிழகத்தில் இன்றைக்கு கட்சி தொடங்குகிறவர்கள் யாராக இருந்தாலும் சரி, எம்.ஜி.ஆர். பெயரை உச்சரிக்காமல் அவர்களின் அரசியல் கிடையாது.
அனைவருக்கும் நிரந்தர வீடு, வீட்டுக்கு ஒரு மோட்டார் சைக்கிள் என்பது இலக்கு. வீட்டுக்கு ஒரு கார் என்பது லட்சியம் என்று தவெக தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்? என்று கேட்கிறீர்கள். முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும், மற்றதையெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.



