முறையான சாலை பராமரிப்பு செய்யாமல் சுங்கச்சாவடி கட்டணங்களை ஆண்டுதோறும் உயர்த்துவதா?ஜவாஹிருல்லா கண்டனம்
சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ நேற்று வெளியிட்ட அறிக்கை: கப்பலூர், எட்டுராவட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய நான்கு சுங்கச்சாவடிகளில் நிலுவைத் தொகை 276 கோடி செலுத்தாததால் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி மாநில அரசுகளும் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கோரிக்கையும் போராட்டமும் நடத்தியுள்ள நிலையில் அதுகுறித்து ஒன்றியஅரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
ஆனால் பொதுமக்களின் போக்குவரத்தைப் பாதிக்கும் வகையில் சுங்கச்சாவடி நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடி இருப்பதும் அதன் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட தீர்ப்பும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. சுங்கச்சாவடிகள் என்ற பெயரில் ஆண்டுதோறும் கட்டணங்கள் அதிகப்படுத்திக் கொண்டே செல்கிறது. சுங்கச்சாவடிகளுக்குள் நுழையாமல் புறவழியிலேயே வாகனங்கள் செல்லும் சூழ்நிலையை தமிழ்நாடு அரசு உருவாக்குவதே இந்த கொள்ளைக்கு தீர்வாக அமையும் என எண்ணத் தோன்றுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.