ஷிபுயா-கு: ஜப்பானின் ஷிபுயா-கு நகரில் நேற்று முன்தினம் ஜப்பான் ஓபன் பேட்மின்டன் போட்டி தொடங்கியது. முதல் நாளில் இந்தியர்கள் யாரும் களம் காணவில்லை. அதே நேரத்தில் 2வது நாளான நேற்று நடந்த ஆடவர் பிரிவு முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், சீனாவின் ஜெங் ஜிங் வாங் மோதினர். அதில் அதிரடியாக விளையாடிய சென் 21-11, 21-18 என நேர் செட்களில் வெற்றி பெற்றார்.
43 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றியை அடுத்து, சென் 2வது சுற்றுக்கு முன்னேறினார். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனைகள் அனுபமா உபாத்யாயா, ரக்சிதா ராம்ராஜ் மோதினர். இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அனுபமா, 21-15, 18-21, 21-18 என்ற செட் கணக்கில் வென்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பி.வி.சிந்து, கொரியாவின் யூ ஜின் சிம் உடன் மோதினார்.
38 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் சிம், 21-15, 21-14 என நேர் செட்களில் சிந்துவை வென்றார். ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரங்கி ரெட்டி / சிராக் ஷெட்டி இணை, 21-18, 21-10 என நேர் செட்களில் கொரியாவின் மின் ஹியுக் காங் / ஜூ டோங் கி இணையை வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தது.