குல்காம்: ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள குடர் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ராணுவம், காஷ்மீர் காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் இணைந்து நேற்று காலை தேடுதல் வேட்டையைத் தொடங்கினார்கள். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடியவர்களை நோக்கி முன்னேறினர். வீரர்கள் வருவதை பார்த்ததும் மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
இதற்கு பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்த மோதலில், தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவத்தின் சினார் படைப்பிரிவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச் சண்டையின்போது, ராணுவத்தின் இளநிலை ஆணைய அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.
அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூட்டில் மேலும் தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் தீவிரவாதிகளின் தாக்குதலில் 2 வீரர்கள் பலியாகினர். அந்தப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால், தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.
* 5 மாநிலங்களில் என்ஐஏ சோதனை
தீவிரவாத சதி வழக்கு தொடர்பாக ஜம்மு காஷ்மீர் உட்பட 5 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா, குல்காம், அனந்த்நாக் மற்றும் புல்வாமா உட்பட 9 மாவட்டங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல் பீகாரில் 8 இடங்களிலும், உத்தரப்பிரதேசத்தில் இரண்டு இடங்களிலும், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒரு இடத்திலும் சோதனைகள் நடத்தப்பட்டது.