வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு, இமாச்சல், பஞ்சாப், உத்தரகாண்டிற்கு சிறப்பு நிவாரண நிதி: பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
புதுடெல்லி: வெள்ளத்தால் பெரும் பேரழிவை சந்தித்துள்ள ஜம்மு காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில்,‘‘மோடி ஜீ வெள்ளம் பஞ்சாபில் பெரும் அழிவை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களின் நிலைமையும் மிகவும் கவலையளிக்கிறது. இதுபோன்ற கடினமான காலங்களில் உங்கள் கவனமும் ஒன்றிய அரசின் தீவிர உதவியும் மிகவும் அவசியமாகும். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது வீடுகள், அன்புக்குரியவர்கள், கால்நடைகளை காப்பாற்ற போராடி வருகிறார்கள். இந்த மாநிலங்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு உடனடியாக ஒரு சிறப்பு நிவாரணத் தொகை அறிவிக்கப்பட வேண்டும். மேலும் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.