புதுடெல்லி: நீர்வளங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஜல் ஜீவன் திட்டம் கடந்த 2019ல் தொடங்கப்பட்டதில் இருந்து 11 மாநிலங்கள் மட்டுமே அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்கி உள்ளன. ஒடிசா, ஆந்திரா, மத்தியபிரதேசம், ஜார்க்கண்ட், கேரளா, ராஜஸ்தான் ஆகிய 6 முக்கிய மாநிலங்கள் தேசிய சராசரியை விட குறைவாக செயல்படுகின்றன. இதனால், நாடு முழுவதும் 100 சதவீத குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் காலக்கெடு 2024ல் இருந்து 2028 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இரும்பு, நைட்ரேட், உப்புத்தன்மை மற்றும் கன உலோகங்கள் உள்ளிட்ட மாசுபாடுகளுடன் 12,000க்கும் மேற்பட்ட கிராமப்புற வீடுகளில் நீர் தரப் பிரச்னைகள் நீடிக்கின்றன. ஜல் ஜீவன் திட்டத்தின் ஒருங்கிணைந்த மேலாண்மை தகவல் அமைப்பில் மாநிலங்களால் பதிவேற்றப்படும் தரவுகளை ஒன்றிய அமைச்சகம் சரிபார்க்க வேண்டும். நம்பகமான தரவு இல்லாமல், கள உண்மைகளை மதிப்பிடுவதும், கிராமப்புற நீர் விநியோகத்தில் உள்ள இடைவெளிகளை சரி செய்வதும் கடினமாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.