Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா: துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்? மோடி இன்று முடிவு எடுக்கிறார்

புதுடெல்லி: ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமாவால் காலியான துணை ஜனாதிபதி பதவிக்கு யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று பிரதமர் மோடி இன்று முடிவு எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாட்டின் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமாக இருந்த ஜெகதீப் தன்கர் பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் மாதம் வரை இருக்கும் நிலையில் உடல் நிலையை காரணம் காட்டி கடந்த ஜூலை 21 அன்று திடீரென பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதனால் காலியாக உள்ள துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் ஆணையம் செப்.9ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்து உள்ளது. இந்த தேர்தலில் மனுத்தாக்கல் செய்ய ஆக.21ஆம் தேதி கடைசி நாள்.

ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று பா.ஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் பிரதமர் மோடி, மூத்த பா.ஜ தலைவர்கள் உள்ளிட்டோர் துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணைஜனாதிபதி தேர்தலில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா, பீகார் ஆளுநர் ஆரிப் முகமது கான், குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத், கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், சிக்கிம் ஆளுநர் ஓம் மாத்தூர், ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஆர்எஸ்எஸ் சார்பில் அந்த அமைப்பின் சித்தாந்தவாதி சேஷாத்ரி சாரி, தற்போதைய மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஆகியோரும் நிறுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஏனெனில் கடந்த ஒரு மாதத்தில் பல ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்கள் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை துணை ஜனாதிபதி பதவி குறித்து ஆலோசனை நடத்தி உள்ளனர். பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரதமர் மோடி மற்றும் பாஜ தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு ஆளும் கூட்டணியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க அங்கீகாரம் அளித்துள்ளது. எனவே பிரதமர் மோடி இன்று துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான கூட்டம் டெல்லி பா.ஜ தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த பாஜ தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பா.ஜ கூட்டணி வேட்பாளர் பெயரை பார்த்த பிறகு இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவாரா, இல்லையா என்பது தெரிந்துவிடும்.

இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படும் பட்சத்தில் செப்.9 ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும். மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் வாக்கு செலுத்துவார்கள். அந்த வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் உடனே அறிவிக்கப்படும்.

* மாஸ் காட்ட துடிக்கும் பாஜ

துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தேவையான பலம் உள்ளது. இருப்பினும் துணை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாஜ தனது வலிமையை பெரிய அளவில் வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளது. துணை ஜனாதிபதி தேர்தல், ஆளும் கூட்டணியின் வலிமையை சோதிக்க முதல் பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. எனவே பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் அனைத்து எம்.பி.க்களும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி அவர்கள் முன்பு உரையாற்றுவார் என்று தெரிகிறது.

எம்பிக்கள் கூட்டத்தைத் தவிர, வேட்புமனு தாக்கல் நாளில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உயர்மட்டத் தலைவர்களின் மெகா கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்து ஒன்றிய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் துணை முதலமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது. மேலும் துணை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது குறித்து எம்.பி.க்களுக்கு பயிற்சி அளிக்க நாடாளுமன்ற வளாகத்தில் மூன்று நாள் பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.