Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த நிலையில் துணை ஜனாதிபதி பதவிக்கு 9 பேரின் பெயர்கள் பரிசீலனை?: வேட்பாளர் தேர்வில் பாஜக தலைமை தீவிரம்

புதுடெல்லி: ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமாவைத் தொடர்ந்து, டெல்லி துணைநிலை ஆளுநர் உட்பட பலரது பெயர்களைக் கொண்ட அடுத்த குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் பட்டியலில் பாஜக தலைமை பரிசீலித்து வருகிறது. துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி கடந்த ஜூலை 21ம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் மாதம் முடிவடையவிருந்த நிலையில் அவர் திடீரென ராஜினாமா செய்தது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இருப்பினும், அவருக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே ஏற்பட்ட நம்பிக்கையின்மை மற்றும் கருத்து வேறுபாடுதான் ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவுக்கு முக்கிய காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான பதவி நீக்கத் தீர்மானத்தில், ஒன்றிய அரசின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போக ஜெகதீப் தன்கர் மறுத்ததே பிரச்னையின் உச்சகட்ட காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது. ஜெகதீப் தன்கரின் திடீர் விலகலைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறவுள்ள துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணியை பாஜக தலைமை மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளன. கடந்த முறை ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, மிகவும் கவனமாக பாஜக தலைமை செயல்படுகிறது.

டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, பீகார் ஆளுநர் ஆரிப் முகமது கான், குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், சிக்கிம் ஆளுநர் ஓம் மாத்தூர், ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோரின் பெயர்கள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இவர்களுடன், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதியான சேஷாத்ரி சாரி மற்றும் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 9 பேரின் பெயர்கள் அடிபடுகின்றன. குடியரசு துணை தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்யும் முழு அதிகாரத்தையும் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி வழங்கியுள்ளது.

இந்த நிலையில் இன்று மாலை பாஜக எம்பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் வெற்றிபெற போதுமான வலிமை இருந்தபோதிலும், தனது பலத்தை வெளிக்காட்டும் விதமாக, அடுத்த வாரம் தனது மூத்த தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்கு பாஜக திட்டமிட்டுள்ளது. மேலும், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் 2வது கூட்டம் நாளை தொடங்குவதால், அனைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களும் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைக்கப்பட்டுள்ளனர். குடியரசு துணைத் தலைவர் என்பவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதில், மாநிலங்களவையின் நியமன உறுப்பினர்களும் வாக்களிக்க தகுதியுடையவர்கள். அரசியலமைப்பு விதிகளின்படி, இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் புதிய துணை குடியரசுத் தலைவர் முழுமையாக ஐந்தாண்டு காலம் பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.