Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தோகா உச்சி மாநாட்டில் பரபரப்பு இஸ்ரேல் மீது கடுமையான ஒருங்கிணைந்த நடவடிக்கை: ஒன்றுகூடிய அரபு-இஸ்லாமிய நாடுகள்

தோகா: இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர இரு தரப்பிலும் மத்தியஸ்தம் செய்வதில் கத்தார் முக்கிய பங்கு வகிக்கிறது. சமீபத்தில் கத்தார் தலைநகர் தோகாவில் இஸ்ரேல் போர் விமானங்கள் திடீர் தாக்குதல் நடத்தி, 5 ஹமாஸ் தலைவர்கள் உட்பட 6 பேரை கொன்றது. இந்த தாக்குதல் குறித்து முன்கூட்டியே அமெரிக்காவிடம் இஸ்ரேல் தகவல் தெரிவித்திருந்தது. இதற்கு கத்தார் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இஸ்ரேலுக்கு எதிராக பதில் நடவடிக்கை குறித்து முடிவெடுக்க கத்தார் தலைநகர் தோகாவில் பிரமாண்ட உச்சி மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் அனைத்து அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் பங்கேற்றன. ஆசியாவில் இருந்து பாகிஸ்தான் உட்பட 27 நாடுகளும், ஆப்ரிக்காவில் இருந்து 27 நாடுகள் உட்பட 57 அரபு-இஸ்லாமிய நாடுகளின் தோகா உச்சி மாநாடு நேற்று நடந்தது.

மாநாட்டை தொடங்கி வைத்த கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி, ‘‘காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளை பற்றி இஸ்ரேல் கவலைப்படவில்லை. அதற்கு பதிலாக காசா இனி வாழத் தகுதியற்றதாக இருப்பதை உறுதி செய்வதை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. ஹமாஸ் தலைவர்களை படுகொலை செய்ய விரும்பினால் இஸ்ரேல் ஏன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்?’’ என ஆவேசமாக பேசினார். ஈரான், அஜர்பைஜான், துருக்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், தலைவர்கள் இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இஸ்ரேலுக்கு அரபு-இஸ்லாமிய நாடுகள் ஒருங்கிணைந்த வலுவான உறுதியான பதிலடி தர வேண்டுமென வலியுறுத்தினர். நேட்டோ போல அரபு-இஸ்லாமிய நாடுகளுக்கென தனி பாதுகாப்பு அமைப்பை உருவாக்கவும் கோரிக்கை விடுத்தனர்.