தீவுத்திடல் சுற்றுலா, தொழில்துறை கண்காட்சி டெண்டர் நடைமுறைக்கு இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னை தீவுத்திடலில் நடைபெற உள்ள 50வது இந்தியா சுற்றுலா மற்றும் தொழில்துறை கண்காட்சியை நடத்துவதற்கான டெண்டர் நடைமுறைகளுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பன் வேர்ல்டு ரெசார்ட்ஸ் இண்டியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில்,‘சென்னை தீவுத்திடலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சுற்றுலா மற்றும் தொழிற்துறை கண்காட்சியை 6 முறை எங்கள் நிறுவனம் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
அதேபோல, அடுத்தாண்டு நடைபெறும் 50வது இந்தியா சுற்றுலா மற்றும் தொழில்துறை கண்காட்சியை நடத்துவதற்கான டெண்டரில் பங்கேற்க விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், எங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. எனவே, எங்களது நிறுவனத்தின் டெண்டரை ஏற்றுக்கொள்ளவும், வெளிப்படையான முறையில் டெண்டரை நடத்தவும் உத்தரவிட வேண்டும்,’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், உரிய விதிமுறைகளை பின்பற்றியே டெண்டர் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டார். இதனையடுத்து, டெண்டர் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.விஜய் ஆனந்த், இதுவரை டெண்டர் யாருக்கும் வழங்கப்படவில்லை.
அரசு இணையதளத்திலும் பதிவேற்றப்படவில்லை. எனவே, எங்களது மனு விசாரணைக்கு உகந்தது என்று வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, டெண்டர் தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாததை சுட்டிக்காட்டி, டெண்டர் தொடர்பான அனைத்து நடைமுறைகளுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மறு உத்தரவு வரும்வரை தற்போதுள்ள நிலையே நீடிக்கவேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

