Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
South Rising
search-icon-img
Advertisement

செங்கோட்டையன் தவெகவில் இணைகிறாரா?.. இணையத்தில் பரவும் தகவலால் பரபரப்பு

கோபி:அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தவெகவில் இணைவதாக பரவிவரும் தகவலால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ், சசிகலா, டிடிவி. தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குரல் கொடுத்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் கோபியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பின்போதும் இந்த கருத்தை வலியுறுத்தியதோடு இதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடுவும் விதித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து செங்கோட்டையன் வகித்து வந்த அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவிகளை பறித்த எடப்பாடி பழனிசாமி, அவரது ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோரின் கட்சி பதவிகளையும் பறித்தார்.

அதைத்தொடர்ந்து கடந்த 30ம் தேதி, தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள சென்ற செங்கோட்டையன் அங்கு ஓ.பன்னீர்செல்வம், டிடிவி. தினகரன், சசிகலா ஆகியோரை சந்தித்ததை தொடர்ந்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் எடப்பாடி நீக்கினார். பின்னர் கடந்த 1ம் தேதி கோபி அருகே கரட்டூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், கொடநாடு கொலை, கொள்ளை வழக்குகளில் எடப்பாடி பழனிசாமி தான் ஏ1 என்ற பொருள் படும்படி பேசியதும், துரோகத்திற்கான நோபல் பரிசை எடப்பாடிக்கு தான் கொடுக்க வேண்டும் என்றும் காட்டமாக பேசினார். இதைத்தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் அடுத்தடுத்து கட்சி பொறுப்புகளில் இருந்து மட்டுமின்றி கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டனர். எடப்பாடி பழனிசாமி, தவெகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை ரகசியமாக நடைபெறுவதாகவும் தகவல் பரவிய நிலையில், தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என முடிவு செய்யப்பட்டதால், தவெகவுடனான எடப்பாடியின் கூட்டணி கனவு தகர்ந்தது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அவரது ஆதரவாளர்களுடன் நவம்பர் 27ம் தேதி தவெகவில் இணைய உள்ளதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகின்றது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பை தொடர்பு கொள்ள முயன்ற போதும் அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.