Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தோனி தொடர்ந்த ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, ஐபிஎஸ் அதிகாரி தாக்கல் செய்த மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை : தனக்கு எதிராக 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கை, நிராகரிக்க கோரி ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. ஐபிஎல் சூதாட்ட வழக்கு தொடர்பாக தொலைக்காட்சி விவாதத்தில் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் கூறியதாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், ஜீ மீடியா கார்ப்பரேஷன், இந்தி செய்தி தொலைக்காட்சியான நியூஸ் நேஷன் நெட்வொர்க் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு கோரி, கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி 2014ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தோனியின் இந்த வழக்கை நிராகரிக்க கோரி ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி சாட்சி விசாரணை தொடங்கியுள்ள நிலையில், இந்த மனுவை ஏற்றுக் கொண்டால் பிரதான வழக்கு முடிவுக்கு வர இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சம்பத்குமார் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் ஜோதிராமன் அமர்வு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.