Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைப்பது மனித உரிமை மீறல் ஆகாது: ஐகோர்ட் விளக்கம்

சென்னை: சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த வேணுகோபால் என்பவரிடம் மயிலாப்பூரை சேர்ந்த விஜயகிருஷ்ணன் என்பவர் தனது மாமனார் சொத்து பத்திரத்தை அடமானமாக வைத்து 6 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார்.

இந்த நிலையில், அடமானமாக வைத்திருந்த சொத்து பத்திரங்களை வேணுகோபால் திருடி விட்டதாக விஜய கிருஷ்ணன் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் குறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி வேணுகோபாலுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பினர். அதன்படி மூன்று நாட்கள் விசாரணைக்கு ஆஜரான போது, சொத்து பத்திரங்களை விஜய கிருஷ்ணனிடம் திருப்பிக் கொடுக்கும்படி மிரட்டியதாக கூறி புளியந்தோப்பு காவல் ஆய்வாளர் ரவி, உதவி ஆய்வாளர் ஷஜிபா ஆகியோருக்கு எதிராக வேணுகோபால் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம், இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஷஜிபாவுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், இருவருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஆய்வாளர் ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஹேமந்த் சந்தன் கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இன்ஸ்பெக்டர் ரவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விஜய கிருஷ்ணனின் புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மை குறித்து விசாரிக்கும் நோக்கத்தில் மட்டுமே வேணுகோபால் காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டார். இதை கவனிக்காமல் மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்று வாதிட்டார்.

இந்த வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைப்பது, மனித உரிமை மீறல் ஆகாது. விசாரணையின் போது புகார்தாரரான வேணுகோபால் துன்புறுத்தப்பட்டார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. எனவே, இன்ஸ்பெக்டர் ரவிக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் மற்றும் அவருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.