உயர் நீதிமன்ற உத்தரவுபடி தமிழ்நாடு ஐஎன்டியுசி தலைவர் தேர்தலை நவ.16ல் நடத்த முடிவு: அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவு படி, தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி தலைவர் தேர்தல் வரும் 16ம்தேதி சென்னை அல்லது செங்கல்பட்டு மாவட்டத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான தீர்மானம் அவசர செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. மிழ்நாடு ஐ.என்.டி.யு.சி., அவசர செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி. தலைமை அலுவலகமான ஜி.ஆர்.பவனில் நடைப்பெற்றது. கூட்டத்துக்கு, தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சியின் மூத்த நிர்வாகி ஏ.கல்யானராமன் தலைமை வகித்தார்.
பொதுச் செயலாளர் எம்.பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தார். ஐ.என்.ஆர்.எல்.எப் தலைவர் வாழப்பாடி ராம. கர்ணன், நிர்வாகிகள் எஸ். லிங்கமூர்த்தி, ராயபுரம் பி.கோபிநாத், சி.ஜெயபால், எம். ஆறுமுகம், ஆலந்தூர் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, அவரது உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:கடந்த 27ம்தேதி சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பென்ச் வழங்கிய தீர்ப்பில் தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி.யின் மூத்த நிர்வாகிகளை கொண்டு தேர்தல் நடத்தி கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளதை பாராட்டுகிறோம். தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி. தேர்தல் நடத்துவதற்க்கு சென்னை உயர்நீதி மன்ற டி.விஷன் பென்ச் உத்தரவுபடி மூத்த நிர்வாகிகள் தேர்தல்குழு நிர்வாகிகளாக முன்னாள் மின் வாரிய துணை செயலாளர் ஏ.கல்யாணராமன், பி.எஸ்.என்.எல் தலைவர் எஸ்.லிங்கமூர்த்தி, எம்.ஆறுமுகம், நந்தகுமார் ஆகியோர்களின் வழிகாட்டுதலின் படி தேர்தல் நடைபெறும்.
தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி.யின் தேர்தல்குழு நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதை தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஷ்ணுபிரசாத் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.சோமசுந்தரம் ஆகியோரின் கண்காணிப்பில் தேர்தல் நடைபெறும்.தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி.யின் மாநில அவசர செயற்குழு கூட்டத்தில், தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி.யின் சட்ட விதிகளின் படி 3 வழிமுறையில் தேர்தல் நடத்துவதற்கு விதிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் மாநில தலைவரை தேர்ந்தெடுத்து அவருக்கு முழு அதிகாரம் வழங்கி அதன்மூலம் மற்ற நிர்வாகிகளை நியமிப்பது என்று ஏக மனதாக முடிவு செய்யப்படுகிறது.
தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி. தேர்தல்குழு பரிந்துரைபடி தேர்தல், சென்னை அல்லது செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 16ம்தேதி (ஞாயிற்றுகிழமை) காலை 9 மணியளவில் நடைபெறுகிறது. தேர்தல் நடைப்பெறும் இடம் குழுவால் தீர்மானிக்கப்பட்டு பிறகு அறிவிக்கப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
 
  
  
  
   
