சென்னை: தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தங்களுடைய இடைக்கால மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக பகுஜன் சமாஜ் தெரிவித்துள்ளது. தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் சென்னை முதலாவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை யானை சின்னத்தை பயன்படுத்த தவெக கட்சிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டுமென்று இடைக்கால மனுவும் தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி பி.சந்திரசேகரன் தெரிவித்தார். அப்போது, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.ஆனந்தன், இடைக்கால உத்தரவு எங்களுக்கு எதிராக வந்தால் அது பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் புதிதாக தொடங்கிய தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சிக்கு சாதகமாக அமைந்து விடும். இந்த உத்தரவை அவர்கள் தவறாக பயன்படுத்த நேரிடும்என்று வாதிட்டார். ஆனால், இடைக்கால உத்தரவை தள்ளி வைக்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார். இதை தொடர்ந்து, தங்களுடைய இடைக்கால மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக ஆனந்தன் தெரிவித்தார். இது தொடர்பான உத்தரவை நீதிபதி தள்ளி வைத்தார்.