Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெல்லையில் இருந்து தென்காசி வழியாக திருவனந்தபுரத்திற்கு இன்டர்சிட்டி ரயில்: ரயில் பயணிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

நெல்லை: தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் பாவூர்சத்திரத்தில் நடந்தது. ரயில் பயணிகள் சங்கத் தலைவர் பாண்டியராஜா தலைமை வகித்தார். பொருளாளர் சேவியர்ராஜன் முன்னிலை வகித்தார். தங்கராஜ் வரவேற்றார். கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தின் வழியாக கூடுதல் ரயில்கள், அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு, புதிய ரயில் நிறுத்தம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நெல்லையிலிருந்து தென்காசி வழியாக பெங்களூருக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும். சிலம்பு மற்றும் தாம்பரம் - செங்கோட்டை வாரம் மும்முறை ரயில் ஆகியவற்றை தினசரி இயக்க வேண்டும். மும்பை நெல்லை சாளுக்கியா வாரம் மும்முறை ரயிலை தென்காசி வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்.

தென்காசி வழியாக நெல்லை - திருவனந்தபுரம், திருச்செந்தூர் - கொல்லம் இன்டர்சிட்டி ரயில்கள் இயக்க வேண்டும். தென்காசி வழியாக இயங்கும் நெல்லை - மேட்டுப்பாளையம் வாராந்திர ரயிலை நிரந்தரமாக வேண்டும். தென்காசி வழியாக நெல்லை - திருப்பதி வராந்திர சிறப்பு ரயில் இயக்க வேண்டும். செங்கோட்டை - நெல்லை காலை ரயிலில் கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைக்க வேண்டும். செங்கோட்டை - ஈரோடு மற்றும் செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு பெட்டிகள் இணைக்க வேண்டும். செங்கோட்டை -நெல்லை காலை ரயில் 8.30 மணிக்குள் நெல்லை ரயில் நிலையத்தை சென்றடைய வேண்டும். தாம்பரம் செங்கோட்டை வாரம் மும்முறை ரயில் கீழக்கடையம் ரயில் நிலையத்திலும், கொல்லம் சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் பாம்பு கோயில் சந்தை ரயில் நிலையத்திலும் இரு மார்க்கங்களிலும் நின்று செல்ல வேண்டும்.

கீழக்கடையம், பாவூர்சத்திரம் ரயில் நிலைய நடைமேடை நீட்டிப்பு பணிகளை உடனே தொடங்க வேண்டும். கடையநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் லூப் லைனிங் வேகத்தை 30 ஆக அதிகப்படுத்த வேண்டும். சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் இரண்டாவது நடைமேடை மற்றும் பாவூர்சத்திரம் ரயில் நிலைய முதலாவது நடைமேடை ஆகியவற்றில் கூடுதல் மேற்கூரைகள், இருக்கைகள், மின்விசிறிகள் மற்றும் விளக்குகள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் உறுப்பினர்கள் ராஜா, பிரகாஷ், சங்கர், செந்தில், சந்துரு, பிச்சையா, சுப்புராஜ், ராஜசேகர், வேல்முருகன், மகேந்திரன், ராம்குமார் செல்வா சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். செயலாளர் ஜெகன் நன்றி கூறினார்.