Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

4,300 கிமீ ஊடுருவி உக்ரைன் டிரோன் தாக்குதல்; 40 ரஷ்ய விமானங்கள் அழிப்பு

கீவ்: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் துருக்கியில் இன்று நடக்க உள்ளது. இந்த நிலையில்,ரஷ்யாவில் உள்ள முக்கிய விமான தளங்களை குறி வைத்து நேற்று உக்ரைன் சரமாரியாக டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. உக்ரைன் எல்லையில் இருந்து 4,300 கிமீ தூரத்தில் உள்ள இர்க்குட்ஸ் மாகாணம், பெலயா விமான தளம் உள்ளிட்ட 4 விமானப்படை தளங்களில் இந்த தாக்குதல் அடுத்தடுத்து நடந்தது. இதில், விமான தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40 அதி நவீன டியூ 95, டியூ 22 போர் விமானங்கள் மற்றும் ஏ 50 கண்காணிப்பு விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் ராணுவ அதிகாரி தெரிவித்தார். இந்த போர் விமானங்களை பயன்படுத்திதான் உக்ரைன் மீது ரஷ்யா குண்டு வீசியது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் எல்லையில் ரஷ்ய எல்லையில் உள்ள குர்ஸ்க் பகுதியில் 2 ரயில்வே பாலங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. இதனால் சரக்கு ரயில் தடம்புரண்டது. இதற்கிடையே, உக்ரைன் ராணுவத்தின் பயிற்சி மையத்தை குறி வைத்து ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 12 வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று உக்ரைன் ராணுவ அதிகாரி தெரிவித்தார்.

லாரிகளில் இருந்து ஏவப்பட்ட டிரோன்கள்

சரக்குகள் ஏற்றிச்செல்லும் லாரிகளில் ஏராளமான டிரோன்களை மறைத்து ரஷ்யாவில் 4300 கிமீ தூரம் வரை உக்ரைன் ராணுவம் எடுத்துச் சென்றுள்ளது. விமானப்படை தளங்கள் அருகே லாரியை நிறுத்தி இந்த டிரோன்களை அடுத்தடுத்து ஏவியுள்ளனர். திடீரென நடத்தப்பட்ட தாக்குதலால் ரஷ்ய விமானப்படை நிலைகுலைந்து போனது.