*நடவடிக்கை கோரி இணை கலெக்டரிடம் மனு
சித்தூர் : சித்தூரில் நடந்த மனுநீதிநாள் முகாமில் சாலை அமைக்க தனிநபர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில், இணை கலெக்டர் வித்யாதாரி தலைமையில் மனுநீதிநாள் முகாம் நேற்று நடைபெற்றது.
இதில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். கூட்டத்தில் சாலை, குடிநீர் வசதி, நில ஆக்கிரமிப்பு செய்துவர் மீது நடவடிக்கை, முதியோர் உதவித்தொகை, சுடுகாடுக்கு வழி, ரேஷன் கார்டு, இலவச வீட்டு மனை பட்டா, சுகாதார வசதிகள் கோரி மொத்தம் 326 பேர் இணை கலெக்டரிடம் மனுக்களை வழங்கினர்.
கூட்டத்தில் சித்தூர் மாவட்டம், வெதுருகுப்பம் மண்டலம், பொம்மாயி பள்ளியில் எஸ்சி காலணியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
எங்கள் கிராமத்திற்கு கொடி வழி மட்டுமே உள்ளதால் பெரும் அவதிப்பட்டு வருகிறோம். சாலை அமைக்க கோரி மண்டல வருவாய்த்துறை அலுவலகத்திலும், மாவட்ட வருவாய் துறை அலுவலகத்திலும் மனு அளித்தோம். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிமெண்ட் சாலை அமைக்க உத்தரப்பிறப்பித்தனர்.
அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் எங்கள் கிராமத்தை சேர்ந்த தனிநபர் சிலர் சிமெண்ட் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியில் ஈடுபடாமல் பாதியில் சென்று விட்டார்கள்.
இதுகுறித்து கலெக்டரிடம் புகார் தெரிவித்தோம். மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார் ஆனால் இதுவரை அதிகாரிகள் கலெக்டர் பிறப்பித்த உத்தரவை கடைபிடிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.
சாலை வசதி இல்லாததால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே சாலை பணியை விரைந்து தொடங்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.தொடர்ந்து, மனுக்களை பெற்றுகொண்ட இணை கலெக்டர் மனுதாரர்களுக்கு ஓரிரு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
அதேபோல் சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.முகாமில் பயிற்சி கலெக்டர் நரேந்திர பாடல், டிஆர்ஓ மோகன் குமார், ஆர்டிஓ ஸ்ரீநிவாஸ், ஜில்லா பரிஷத் முதன்மைச் செயல் அலுவலர் ரவிக்குமார் நாயுடு உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.முன்னதாக பொம்மாயி பள்ளியில் எஸ்சி காலணியை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.