சென்னை: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ), சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசு பல்கலைக்கழகமான இக்னோ தொலைதூரக் கல்வி திட்டத்தின் வாயிலாக பல்வேறு பாடப் பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. 2025 ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி முடிவடைந்த நிலையில், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, கடைசி தேதி வரும் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, செமஸ்டர் படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகள் தவிர மற்ற அனைத்து வகை இளங்கலை, முதுகலை, டிப்ளமோ படிப்புகளிலும் மாணவர்கள் செப்.30 வரை சேரலாம். தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை இக்னோ இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்துகொள்ளலாம். மேலும், இக்னோ சென்னை மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டும் விவரம் பெறலாம். இக்னோவில் பிஏ, பிகாம், பிஎஸ்சி படிப்புகளில் சேரும் தகுதியுடைய எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தில் 50 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே, தகுதியுள்ள எஸ்சி, எஸ்டி மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.