சென்னை: இந்த கல்வியாண்டிற்கான இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி டிப்ளமோ மருத்துவ பட்டயப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2025-26ம் கல்வியாண்டிற்கு, சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள அரசு ஆயுஷ் துணை மருத்துவ படிப்பு பள்ளிகளில் உள்ள இடங்களுக்கான பட்டயப்படிப்புகள் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள் தகுதியுள்ளவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. www.tnhealth.tn.gov.in., www.tnayushselection.org. என்கின்ற வலைதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இணையவழியில் மட்டுமே விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கும் முன் தகவல் தொகுப்பேட்டினை முழுமையாகப் படித்து சரியான தகவல்களைப் பதிவேற்றவும் மற்றும் தேவையான இடங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களின் பிடிஎப்/ஜேபிஇஜி வடிவில் பதிவேற்றவும். கல்வி கட்டண முன்பணம் இவை அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும். இன்று முதல் விண்ணப்பம் பதிவு செய்யலாம். விண்ணப்பங்கள், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு வருகிற 23ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.