சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான டி.என் ரைஸ் முதலீட்டு இயக்கத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனியில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் 26 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் கையெழுத்திடப்பட்ட மொத்த முதலீடுகள் ரூ.7020 கோடியாக உயர்ந்து, 15,320 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. தமிழ்நாட்டை பற்றி உங்களுக்கெல்லாம் நான் சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரம், இந்தியாவிலேயே அதிகமான டபுள் டிஜிட் பொருளாதார வளர்ச்சியையும், உற்பத்தித்துறை வளர்ச்சியையும் அடைந்திருக்கின்ற ஒரே மாநிலம். இப்படிப்பட்ட மாநிலத்தில் தொழில் தொடங்க உங்களை எல்லாம் நான் அழைக்கிறேன்.
ஜெர்மனி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையில் பொருளாதாரத்தில் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது. ஜெர்மனி எப்படி ஐரோப்பிய யூனியனின் முக்கிய தொழில்துறை நாடோ, அதேபோல, இந்திய ஒன்றியத்தில் தொழில்துறையின் இதயத்துடிப்பாக தமிழ்நாடு மாநிலம் விளங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் சொன்னால், தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி. முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள், முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்கள், கிட்டத்தட்ட 54 லட்சம் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள், கிட்டத்தட்ட 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் என்று இருக்கின்ற தமிழ்நாட்டுக்கும், ஜெர்மனிக்கும் இடையே உள்ள பொருளாதார உறவு மூலமாக, இந்த நிலையை நாம் இன்னும் பலப்படுத்திக் கொள்ள முடியும்.
மோட்டார் வாகன துறையில் - டெயிம்லர் மற்றும் பி.எம்.டபிள்யு, எலக்ட்ரிக்கல் உற்பத்தித் துறையில் - ஸ்நெய்டர், காற்றாலைத் துறையில் - ZF மற்றும் சீமன்ஸ், தகவல் தொழில்நுட்பத் துறையில் பாஷ் போன்ற அறுபதுக்கும் மேற்பட்ட ஜெர்மன் நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனங்களை நிறுவ தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்தப் பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக, நீங்கள் எல்லோரும் தமிழ்நாட்டில் முதலீடு செய்யவேண்டும் என்று கேட்க வந்திருக்கிறேன். இதற்கு முன்னால், யுனைட்டட் அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்திருக்கிறேன். பல்வேறு முதலீட்டு மாநாடுகளை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நடத்தி முதலீடுகளை ஈர்த்துக் கொண்டிருக்கிறோம்.உலகளவில் நீங்கள் சிறந்து விளங்கும் ரோபோடிக்ஸ், மூலதனப் பொருட்கள் மற்றும் புத்தாக்கம் போன்ற துறைகளில் இருந்தும், உங்களுடைய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜெர்மனி முதலீட்டாளர்களை அன்புடன் நான் கேட்டுக் கொள்கிறேன்.
நான் இங்கே வெறும் முதலீட்டுக்காக மட்டும் வரவில்லை. ஜெர்மனி - தமிழ்நாடு ஆகிய இரண்டு பொருளாதாரங்களுக்கு இடையே ஒரு பாலம் அமைக்க வந்திருக்கிறேன். தொழில் மற்றும் தொழில்நுட்பத்தில், ஜெர்மனியின் துல்லியத்தையும், தமிழ்நாட்டின் ஆற்றலையும் இணைத்தால், உலகளவில் ஒரு புதிய வளர்ச்சிப் பாதையையும், ஐரோப்பா மற்றும் ஆசியா இடையே ஒரு வலுவான வர்த்தகப் பாலத்தையும் நம்மால் உருவாக்க முடியும். தமிழ்நாட்டிற்கு வரும்போது, நீங்கள், உங்கள் பிசினசுக்கான மார்க்கெட்டாக மட்டும் பார்க்க மாட்டீர்கள்; உங்களுடன் இருந்து, உங்களுடைய வெற்றியைக் கொண்டாடுகின்ற பார்ட்னர்ஸை நீங்கள் பார்ப்பீர்கள். பல்வேறு தொழில்களை மேற்கொள்ள உகந்த சூழலையும், திறன்மிக்க மனித வளத்தையும் உறுதி செய்வதுடன், பல்வேறு தொழில் கொள்கைகளின்கீழ் உயர் சலுகைகளையும் அளிக்க இருக்கிறோம். எனவே, உங்களுடைய முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று மீண்டும் அன்போடு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தாரேஸ் அகமது மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். முதல்வரின் ஐரோப்பா பயணம் அடுத்த கட்டமாக இங்கிலாந்து நாட்டில் தொடரும், அங்கு மேலும் பல முதலீட்டாளர்கள் சந்திப்புகள் மற்றும் இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனியில் இருந்து இங்கிலாந்து சென்றார்;
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: ‘டி.என். ரைசிங்’ என்ற பெயரில் ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில், ரூ.3,819 கோடி மதிப்புள்ள 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அவை 9,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வாகனங்களின் உதிரிபாகங்கள் மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறைகளில் உலகளாவிய தலைவர்கள் தங்கள் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்துள்ளனர்.
ஜெர்மனி வருகையின்போது மொத்தம் ரூ.7,020 கோடி மதிப்புள்ள 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இது தமிழ்நாட்டில் 15,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திராவிட மாடல் அரசு உரையாடல்களை உறுதிமொழிகளாகவும் நம்பிக்கையை உறுதியான வளர்ச்சியாகவும் மாற்றுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு ஐரோப்பா பயணத்தின் அடுத்தக்கட்டமாக இங்கிலாந்து நாட்டுக்கு சென்றார். அங்கு, மேலும் பல முதலீட்டாளர்கள் சந்திப்புகள் மற்றும் இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.