Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வீட்டு வேலை செய்யாததால் கணவரின் கழுத்தை அறுத்த இந்திய பெண்: அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம்

சார்லட்: அமெரிக்காவில் வீட்டு வேலை செய்யாததால் ஏற்பட்ட தகராறில், இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் தன் கணவரை கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம் சார்லட் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரவிந்த் (49), அவரது மனைவி சந்திரபிரபா சிங் (44) தம்பதி வசித்து வருகின்றனர். சந்திரபிரபா சிங் அங்குள்ள எண்ட்ஹேவன் தொடக்கப் பள்ளியில் ஆசிரியை உதவியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 12ம் தேதி, வீட்டை சுத்தம் செய்யாதது தொடர்பாக கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், சந்திரபிரபா சிங் கத்தியால் தனது கணவர் அரவிந்தின் கழுத்தில் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அரவிந்த், அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அரவிந்த் அளித்த புகாரில், வீட்டு வேலை செய்யாததால் ஆத்திரமடைந்த தனது மனைவி, தன்னை வேண்டுமென்றே கத்தியால் தாக்கியதாகக் கூறியுள்ளார். ஆனால், சந்திரபிரபா சிங் இதனை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ‘நான் காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது கையில் கத்தியுடன் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக கணவரின் கழுத்தில் வெட்டுப்பட்டு விட்டது’ என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சந்திரபிரபா சிங்கை கைது செய்தனர். சட்டவிரோதமாகவும், உள்நோக்கத்துடனும் கொடூரமாக கணவரின் கழுத்தை அறுத்ததாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. முதலில் அவருக்குப் பிணை வழங்க மறுத்த நீதிமன்றம், பின்னர் 10,000 டாலர் பிணையில் அவரை விடுவித்தது. தற்போது அவர், மின்னணு கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டின் எதிரொலியாக, அவர் பணியாற்றி வந்த பள்ளியில் இருந்தும் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.