Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியா-இலங்கை மின் இணைப்பு திட்டம்: இரு நாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை

கொழும்பு: இந்தியா மற்றும் இலங்கையின் மின்சார கட்டமைப்பை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும்போது இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 1000 மெகாவாட் மின்சாரத்தை ஏற்றுமதி செய்யமுடியும். அதே நேரத்தில், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை இந்தியாவுக்கு விற்கவும் முடியும். இந்த திட்டம் தொடர்பாக கடந்த ஜூன் மாதம் டெல்லியில் இரு நாட்டு உயர் அதிகாரிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடந்தது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரு நாட்டு அதிகாரிகள் குழு வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் இந்திய குழுவுக்கு ஒன்றிய மின்துறை செயலாளர் பங்கஜ் அகர்வாலும், இலங்கை குழுவுக்கு இலங்கை எரிசக்தி அமைச்சக செயலாளர் உதயங்க ஹேமபாலவும் தலைமை தாங்கினர். அப்போது இருதரப்பு அதிகாரிகளும் மின்கட்டமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அம்சங்கள் குறித்து விவாதித்தனர்.

இதுபற்றி இலங்கைக்காக இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘இலங்கையின் எரிசக்தி பாதுகாப்புக்கு 1,000 மெகாவாட் மின் இணைப்பு திட்டம் மிகவும் முக்கியமானது. மின் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் இலங்கையால் இந்தியாவில் இருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்ய இயலும். மேலும் உபரியாக இருக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கை அந்நிய செலாவணியை ஈட்ட முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.