சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.10 லட்சம் வரை இலவச சுகாதார காப்பீடு திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. நேற்று முதல்வர் பகவந்த் மான் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அரசு மற்றும் பட்டியலிடப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை பணமில்லா மருத்துவ சிகிச்சை வழங்கும் சுகாதார காப்பீடு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக முதல்வர் பகவந்த்மான் கூறுகையில்,’ ரூ.10 லட்சம் வரை பணமில்லா சிகிச்சையை வழங்கும் முதல் மாநிலமாக பஞ்சாப் மாறியுள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கப்படும். இதற்கான சுகாதார அட்டைகள் சேவை மையங்கள் அல்லது பொது சேவை மையங்களில் வழங்கப்படும். குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் ஐடியைப் பயன்படுத்தி ஆன்லைனில் பதிவு செய்து சுகாதார அட்டையைப் பெறலாம். இந்தத் திட்டத்திற்காக இதுவரை 550க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை 1,000 ஆக அதிகரிக்கப்படும். முன்பு, ஒரு குடும்பம் ரூ.5 லட்சம் வரை மட்டுமே சிகிச்சை பெற முடியும். தற்போது அந்த வரம்பு ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.778 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்றார்.