Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேரளாவில் விசிஆர், 3 வீடியோ கேசட்டுடன் மாயம் 29 வருடம் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள ஒரு வீடியோ லைப்ரரியில் விசிஆர், வீடியோ கேசட்டுகளை வாடகைக்கு எடுத்து தலைமறைவான தொழிலாளியை 29 வருடங்களுக்குப் பின்னர் போலீசார் கைது செய்து உள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு: கொல்லம் அருகே உள்ள அஞ்சல் பகுதியைச் சேர்ந்தவர் சபீர். வீடியோ லைப்ரரி நடத்தி வந்தார். கடந்த 1995ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி அந்த பகுதியை சேர்ந்த ஐயப்பன் (60) என்ற தொழிலாளி விசிஆர் மற்றும் 3 வீடியோ கேசட்டுகளை ஒரு நாள் வாடைக்கு எடுத்தார்.

ஆனால் மறுநாள் அவற்றை கடையில் ஒப்படைக்காமல் ஐயப்பன் தலைமறைவானார். இதுகுறித்து சபீர் அஞ்சல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஐயப்பனை தேடி வந்தனர். பல இடங்களில் தேடியும் அவர் சிக்கவில்லை. பல மாதங்கள், பல வருடங்கள் ஆகியும் ஐயப்பன் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. ஆனாலும் அஞ்சல் போலீசார் இந்த பைலை மூடாமல் வைத்திருந்தனர்.

இந்தநிலையில் 29 வருடங்களுக்குப் பின்னர் ஐயப்பன் குறித்த விவரங்கள் போலீசுக்கு தெரியவந்தது. அவர் கோழிக்கோடு அருகே முக்கம் என்ற இடத்தில் உள்ள ஒரு எஸ்டேட்டில் பணிபுரிந்து வருவதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அஞ்சல் போலீசார் அங்கு விரைந்து சென்று ஐயப்பனை கைது செய்து கொல்லத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.