Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புனிதமான மாதத்தில் அசைவம் விற்பதா? கேஎப்சி கடையை இழுத்து மூடிய இந்து அமைப்பினர்: ஊழியர்களையும் தாக்கியதால் பரபரப்பு

காஜியாபாத்: புனிதமான சிராவண மாதத்தில் அசைவம் விற்க எதிர்ப்பு தெரிவித்து காஜியாபாத்தில் கேஎப்சி கடையை இந்து அமைப்பினர் இழுத்து மூடினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வடமாநிலங்களில் சிராவண மாதம் தொடங்கி உள்ளது. புனித மாதமாக இதனை இந்துக்கள் கடைபிடித்து வருகின்றனர். அதேபோல், உத்தரபிரதேசம், டெல்லி, அரியானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கன்வார் யாத்திரையும் தொடங்கி நடைபெற்றுள்ளது. இந்த யாத்திரை செல்லும் வழிகளில் மதுபானம், இறைச்சி கடைகள் மூடப்பட வேண்டும் என்று பாஜ எம்எல்ஏ.க்கள், சில இந்து அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், கேஎப்சி கடையை இந்து அமைப்பினர் வலுக்கட்டாயமாக இழுத்து மூடுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச மாநிலம் என்சிஆர் மாவட்டமான காஜியாபாத் நகரின் முக்கியமான பகுதியில் கேஎப்சி கடை செயல்பட்டு வருகிறது. கடந்த 17ம் தேதி அங்கு சென்ற ‘இந்து ரக்‌ஷா தளம்’ என்ற இந்துத்துவா அமைப்பினர் உறுப்பினர்கள் கடையை முற்றுகையிட்டனர். மேலும், அங்கிருந்த ஊழியர்களிடம் கடையை மூடுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு, ஊழியர்கள் மறுக்கவே அவர்களை அந்த அமைப்பினர் தாக்கினர். பின்னர், வலுக்கட்டாயமாக அந்த கடையின் ஷட்டரை இழுத்து மூடினர்.

அப்போது, பாரத் மாதா கீ ஜெய், ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் ஹர் ஹர் மகா தேவ் போன்ற முழக்கங்களை எழுப்பினர். நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, போராட்டக்காரர்களை அமைதிப்படுத்தினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சவான் காலத்தில் சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் என்று கூறி கேஎப்சி உணவு விற்பனை நிலையம் ஒரு அறிவிப்பு பலகையை வைத்தது. இதனால் பிரச்னை முடிவுக்கு வந்தது. தற்போது வீடியோ வைரலாகி விட்டதால் வன்முறையில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.