Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு; பாலம் இடிந்து விழுந்ததில் ஆற்றில் விழுந்தவர்களை தேடும் பணி தீவிரம்: குஜராத் மாடல் அரசில் தொடரும் அலட்சிய சம்பவங்கள்

காந்திநகர்: குஜராத் மாநிலம் வதோதரா மற்றும் ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் வகையில் கம்பீரா பாலம் அமைந்துள்ளது. சுமார் 40 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த பாலம் வதோதரா மாவட்டத்தின் பத்ரா தாலுகாவில் உள்ள முஜ்பூரில் அமைந்துள்ளது. மஹிசாகர் ஆற்றின் குறுக்கே கம்பீரா-முஜிப்பூர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் கடந்த 1985ம் ஆண்டு இந்த பாலம் கட்டப்பட்டது. முக்கியமான பாலம் என்பதால், தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென நேற்று காலை இடிந்து விழுந்தது. இதில் பாலத்தில் சென்று கொண்டிருந்த 2 லாரிகள், 2 வேன்கள், 1 ஆட்டோரிக்‌ஷா மற்றும் 1 இரு சக்கர வாகனம் சரசரவென ஆற்றில் விழுந்தன. ஒரு லாரி அந்தரத்தில் தொங்கி நின்றது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தேசிய பேரிடர் மீட்பு படையும் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 11 பேர் பலியானார்கள். தற்போது பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை பணியாளர்கள் தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது. அதே நேரத்தில் விபத்து நடந்தவுடன் பொதுமக்கள் சிலர் ஆற்றில் இறங்கி, உயிருக்கு போராடியவர்களை மீட்டுள்ளனர். ஆனாலும், உயிரிழப்புகள் தவிர்க்க முடியாமல் போய் இருக்கிறது. இதுதொடர்பாக விபத்து மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையறிந்ததும் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், அனைத்து சிகிச்சைக்கான உதவிகளும் மாநில அரசால் செய்யப்படும் என்றார். மேலும், சம்பவம் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணையில், பாலத்தை தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வந்தன. இருப்பினும் பாலத்தின் உறுதி தன்மையை பராமரிக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், அதனால்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000 நிவாரண உதவி வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு மோர்பி பாலம், இந்தாண்டு மஹிசாகர் பாலம் என குஜராத்தில் தொடர்ந்து பாலம் இடிந்து விழுந்து விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியுள்ளன. காங்கிரஸ் வெளியிட்ட பதிவில், குஜராத் மாடலின் பின்னணியில் உள்ள ஊழலை இந்த சம்பவம் பிரதிபலிக்கிறது. உள்கட்டமைப்பு திட்டங்களில் பரவலாக ஊழல் உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்’ என்று கூறியுள்ளது.