Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புனே சொகுசு கார் விபத்தில் கைதான சிறுவன் விடுதலை: மும்பை ஐகோர்ட் உத்தரவு

மும்பை: கடந்த மே 19ம் தேதி அதிகாலை, புனேவில் மதுபோதையில் போர்ஷே ரக காரை ஓட்டிச் சென்ற 17 வயது சிறுவன் பைக் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதில் 2 ஐடி ஊழியர்கள் பலியாகினர். இந்த வழக்கில் சிறுவன் மைனர் என்பதால் அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் ஜாமீனுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சிறுவனை மீண்டும் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க சிறார் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு மாதத்துக்கும் மேலாக சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டு இருந்தார். இதனை எதிர்த்து சிறுவனின் அத்தை மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘சிறுவனை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்குமாறு சிறார் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. அதிகார வரம்புக்கு உட்படாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோபத்துக்கு மத்தியில் சிறுவனின் வயதை கருத்தில் கொள்ளாமல் உத்தரவை கொடுத்துள்ளனர். சிறார் நீதிச் சட்டத்தின் படி சிறுவன் இழைத்தது குற்றமாகவே இருந்தாலும் அவர் குழந்தையாகவே கருதப்பட வேண்டும்’ என்று கருத்து தெரிவித்தனர். மேலும் சிறுவனை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கும் சிறார் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள் அவரை கூர்நோக்கு இல்லத்தில் இருந்து உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டனர். சிறுவனை அவரது அத்தையின் பராமரிப்பில் ஒப்படைக்குமாறும் நீதிபதிகள் கூறினர்.