அனில் அம்பானியின் கடன் கணக்கு மோசடி என வகைப்படுத்தியதை ரத்து செய்தது கனரா வங்கி: உயர் நீதிமன்றத்தில் தகவல்
மும்பை: தொழிலதிபர் அனில் அம்பானியின் கடன் கணக்கை மோசடி என வகைப்படுத்தியதை திரும்பப் பெற்று விட்டதாக மும்பை உயர் நீதிமன்றத்தில் கனரா வங்கி தெரிவித்துள்ளது. தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கை 2019 ஜூன் முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனமும் இதன் துணை நிறுவனங்களும் பல்வேறு வங்கிகளின் கடன் வாங்கியுள்ளன. இந்நிலையில், கனரா வங்கி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடன் கணக்கை மோசடி என வகைப்படுத்தி கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி அறிவித்தது.
இந்த நிறுவனத்துக்கும் அதன் துணை நிறுவனங்களுக்கும் வழங்கிய ரூ.1,050 கோடி கடன் தொகையும் இதில் அடங்கும். வங்கியின் இந்த முடிவை எதிர்த்து அனில் அம்பானி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் ரேவதி மோகிதே தேரே மற்றும் நீலா கோகலே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம், வங்கியின் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அனில் அம்பானியின் கடன் கணக்கை மோசடி என வகைப்படுத்திய முடிவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக கனரா வங்கி தரப்பில் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அனில் அம்பானியின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.