இந்தியாவில் ஜேசிபியை பார்க்க 10ஆயிரம் பேர் கூடுவார்கள் 10 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட நாடுகளில் விருது பெறும் பிரதமர் மோடி: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கருத்து
சண்டிகர்: பிரதமர் மோடி தனது 5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்து நேற்று முன்தினம் இந்தியா திரும்பினார். இந்நிலையில் பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து பஞ்சாப் முதல்வர் மான் விமர்சித்து இருந்தார். செய்தியாளர்களிடம் பேசும்போது முதல்வர் மான், ‘‘பிரதமர் ஜீ கானாவுக்குச் சென்றுள்ளார்? அவர் நாடு திரும்பியதும் வரவேற்கப்படுவார். அவர் எந்த நாடுகளுக்கு சென்று வருகிறார் என்பது எனக்கு தெரியவில்லை.அந்த நாட்டின் பெயர், மெக்னீசியாவா, கால்வேசியாவா அல்லது தார்வேசியாவா என்று கடவுளுக்கு மட்டும்தான் தெரியும் . ஆனால் 140கோடி மக்கள் வசிக்கும் இந்திய நாட்டில் அவர் தங்கவில்லை.
அவர் செல்லும் நாடுகளில் பத்தாயிரம் மக்கள் தொகை உள்ளது. மேலும் அங்கு மிகப்பெரிய விருது பெறுகிறார் இங்கே ஜேசிபி இயந்திரத்தை பார்க்கவே பத்தாயிரம் பேர் கூடுகிறார்கள். அவர் 11ஆண்டுகளில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை கூட நடத்தவில்லை” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் பெயர் குறிப்பிடாமல் முதல்வர் பக்வந்த் மானின் விமர்சனத்தை வெளியுறவு துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இது குறித்து வெளியுறவு துறை அமைச்சகம், ‘‘நட்பு நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் உயர் அரசு அதிகாரி கூறிய தேவையற்ற கருத்துக்களில் இருந்து இந்திய அரசு தன்னை ஒதுக்கி கொள்கிறது ” என்று குறிப்பட்டுள்ளது.


