இந்தியாவின் தொழில்துறை பணியாளர்களின் சக்தி மையமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
சென்னை: இந்தியாவின் தொழில்துறை பணியாளர்களின் சக்தி மையமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஒன்றிய அரசின் 2023-24 ஆய்வறிக்கையில், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்சாலைகளில் முதலிடம் பெற்று தொழில்துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டி தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இப் பதிவை இணைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகவலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் தொழில்துறை பணியாளர்களின் சக்தி மையமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. திராவிடத்தால் வாழ்கிறோம், திராவிடமே நம்மை உயர்த்தும். எல்லோரையும் வாழ வைக்கும். அமித்ஷா முதல் பழனிசாமி வரை தி.மு.க. ஆட்சியைப் பழித்துரைக்கும் அனைவருக்கும் ஒன்றிய பா.ஜ.
அரசே தந்துள்ள ‘நெத்தியடி பதில்’ தான் ஒன்றிய அரசின் ஆய்வறிக்கையில் தெரிவித்திருப்பது. சட்டம் -ஒழுங்கைப் பேணிக்காத்து, தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்தி, தடையற்ற மின்சாரம் - போக்குவரத்து வசதிகள் என அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி, வேலைக்கு தேவையான திறன்களை இளம் தலைமுறையினருக்கு அளித்து நாம் நாளும் தீட்டிய திட்டங்களால் இந்தச் சாதனை சாத்தியமாகி இருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும்! அரசியல் காழ்ப்புணர்வில் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவார்கள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.