கான்பெரா: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டதால் டிரா ஆனது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. கான்பெரா நகரில் நேற்று முதல் டி20 போட்டி நடந்தது. முதலில் ஆடிய இந்திய அணியின் துவக்க வீரர்களாக அபிஷேக் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர்.
நாதன் எல்லிஸ் வீசிய 4வது ஓவரில் அபிஷேக் சர்மா (19 ரன்) ஆட்டமிழந்தார். அதன் பின், கில்லுடன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இணை சேர்ந்தார். அவர் அதிரடியாக ஆடி, ஆட்டமிழக்காமல் 24 பந்துகளில் 2 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 39 ரன் குவித்தார். சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 20 பந்துகளில் 37 ரன் எடுத்தார்.
போட்டியின் இடையில் மழை பெய்ததால் போட்டி தடைபட்டது. அதன் பின், 9.4 ஓவரில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 97 ரன் எடுத்திருந்தபோது மீண்டும் பலத்த மழை பெய்யத் துவங்கியது. நீண்ட நேரம் மழை பெய்து மைதானத்தில் தண்ணீர் தேங்கியதால், போட்டி கைவிடப்பட்டது. ஆஸி தரப்பில் நாதன் எல்லிஸ் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இந்தியா - ஆஸி இடையில் 2வது டி20 போட்டி, வரும் 31ம் தேதி (நாளை) மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
* 150 சிக்சர்கள் விளாசி சூர்யகுமார் அசத்தல்
ஆஸியுடனான முதல் டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 2 சிக்சர் விளாசினார். அதையடுத்து, டி20 போட்டிகளில் அவர் விளாசிய சிக்சர்கள் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்தது. அதன் மூலம், டி20 வரலாற்றில் 150 சிக்சர்கள் விளாசிய 2வது வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் படைத்தார். இந்த சாதனைப் பட்டியலில் ரோகித் சர்மா 205 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
