புதுடெல்லி: நாட்டில் கடந்த 15 ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 81% குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக எய்ட்ஸ் நோய் தினத்தை யொட்டி, ‘இந்தியா எச்ஐவி உத்தேசம் 2025’ என்ற பெயரில் நடத்திய ஆய்வு முடிவுகளை ஒன்றிய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா நேற்று முன்தினம் வெளியிட்டார். அதில்,"2010-ம் ஆண்டிலிருந்து எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி இந்தியாவில் எய்ட்ஸ் நோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 81% குறைந்துள்ளது. மேலும், இந்த நோயால் பாதித்தோரின் எண்ணிக்கை 0.2 % அளவுக்கு உள்ளது. அதுமட்டுமல்லாமல், புதிதாக எச்ஐவி நோய்த் தொற்றால் பாதிப்போரின் எண்ணிக்கை 49% குறைந்துள்ளது.
மிசோரம், நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின்
எண்ணிக்கை ஒரு சதவீதம் அளவுக்கு உள்ளது. தேசிய அளவில் பாதிக்கப்பட்ட மக்களின் சதவீதத்துடன் இதை ஒப்பிடும்போது இது 5 மடங்கு அதிகமாகும். அதேபோல் மேகாலயா, பஞ்சாப் மாநிலங்களிலும் போதைப்பொருள் பழக்கம், பாலியல் பிரச்சினைகளால் இளம் வயதினரிடையே எச்ஐவி பாதிப்பு அதிக அளவில் உள்ளது. நாட்டில் சுமார் 6.6 கோடி பேருக்கு எச்ஐவி பாதிப்பு குறித்து சோதனை நடத்தப்பட்டது. தற்போது எச்ஐவி பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 14.9 லட்சத்திலிருந்து 18.6 லட்சமாக அதிகரித்துள்ளது.
புதிதாக எச்ஐவி பாதிப்போர் 35% குறைந்துள்ளது. அதேபோல் எச்ஐவி பாதிப்பால் உயிரிழப்போரின்
எண்ணிக்கையும் 69 சதவீதமாக குறைந்துள்ளது.இந்தியாவில் 2024-ம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி 25.6 லட்சம் மக்கள் எச்ஐவி பாதிப்புடன் வாழ்ந்து வருகின்றனர். இதில் 14 லட்சம் ஆண்கள், 11 லட்சம் பெண்களும் அடக்கம். நாட்டில் உள்ள எச்ஐவி நோயாளிகளில் 74% பேர் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வசிக்கின்றனர். இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

