Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இன்று 79வது சுதந்திர தினம் விடுதலை போராட்ட தலைவர்கள் தியாகங்களை போற்றுவோம்: அரசியல் கட்சி தலைவர்கள் சூளுரை

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் (முன்னாள் முதல்வர்): உண்மையான சுதந்திரம் என்பது சாதி மத வேறுபாடுகளின்றி அனைத்து தரப்பு மக்களும் வளம் பெற்று, அச்சமின்றி வாழ்வதுதான். இந்த நிலையை நாம் இன்னமும் எய்தவில்லை என்பதுதான் யதார்த்தம். தங்கள் உயிரை துச்சமென மதித்து போராடி பெற்றுத் தந்த சுதந்திரத்தை பேணிக் காக்கவும், \”எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்\” என்பதற்கேற்ப அனைத்து தரப்பு மக்களும் வளம் பெறவும், இந்த சுதந்திர தின நன்னாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

செல்வப்பெருந்தகை (தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்): 79வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடுகிற நேரத்தில் மதவெறி சக்திகளை மாய்த்திடவும், மாநில உரிமைகள் பறிப்பதை முறியடிக்கவும், தேர்தல் ஆணையத்தின் வாக்குகளை திருடுகிற நடவடிக்கையின் மூலம் பாஜவின் தேர்தல் வெற்றிக்கு துணை போவதை தடுத்து நிறுத்திடவும், மதநல்லிணக்கத்தையும் கட்டிக் காத்திடவும் சுதந்திர திருநாளில் சூளுரையோற்போம்.

அன்புமணி (பாமக தலைவர்): தமிழ்நாட்டு மக்களின் இன்றைய உண்மையான தேவை சமூகநீதி உள்ளிட்ட அனைத்து உரிமைகளுடனும், சுதந்திரமாகவும் வாழும் உரிமை தான். அதனை, வென்றெடுப்பதற்கான 2வது விடுதலைப் போரை இன்று தொடங்கி, அடுத்த 6 மாதங்களில் வென்றெடுக்க இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ஒவ்வொருவரின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், ஒற்றுமைக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் துணை நிற்போம். இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜவாஹிருல்லா (மமக தலைவர்): இந்த விடுதலை திருநாளில் சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியலமைப்புச் சட்ட உரிமைகளைப் பாதுகாக்கவும்; கருத்துச் சுதந்திரம் மற்றும் நியாயத்திற்காகப் போராடும் உரிமையைப் பாதுகாக்கவும்; ஒவ்வொரு குடிமகனின் வாக்கும் சமமாகவும் நியாயமாகவும் எண்ணப்படும் தேர்தல் முறையை வலுப்படுத்தவும் அனைத்து மக்களின் வாழ்வுரிமையையும் பாதுகாக்கவும் உறுதி எடுத்துக் கொள்வோம்.

டி.டி.வி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): நம் முன்னோர்கள் நமக்காகப் போராடிப் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்பதோடு, சாதி, மத, இன, மொழி ஆகிய வேறுபாடுகளைக் களைந்து நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு தாய்த் திருநாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட இந்நாளில் உறுதியேற்போம்.

இதேபோல சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன், புதிய நீதிக்கட்சி நிறுவன தவைர் ஏ.சி.சண்முகம், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் உள்பட பல்வேறு தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.