Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வருமானத்துக்கு அதிகமாக அதிமுக மாஜி பெண் எம்எல்ஏ ரூ.9.79 கோடி சொத்து குவிப்பு: கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு

பண்ருட்டி: வருமானத்துக்கு அதிகமாக ரூ.9.79 கோடி சொத்து சேர்த்ததாக பண்ருட்டி அதிமுக மாஜி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம், அவரது கணவர் உள்பட 4 பேர் மீது விஜிலென்ஸ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், தற்போதைய அதிமுக மாநில மகளிர்அணி துணைச் செயலாளருமான சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் கடந்த 18ம் தேதி விஜிலென்ஸ் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

2016ம் ஆண்டு அதிமுக எம்எல்ஏவாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், அவரது கணவர் பன்னீர்செல்வம் பண்ருட்டி நகரமன்ற தலைவராக இருந்தபோதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் எழுந்த குற்றசாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது. லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் 17 மணி நேரம் இந்த சோதனையை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ஏராளமான சொத்து ஆவணங்களை போலீசார் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.9.79 கோடி சொத்து சேர்த்ததாக சத்யா பன்னீர்செல்வம் மற்றும் அவரது கணவர் பன்னீர்செல்வம் உள்பட 4 பேர் மீது விஜிலென்ஸ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். சத்யா பன்னீர்செல்வம் எம்எல்ஏவாக பதவியில் இருந்த 2016- 2021ம் ஆண்டு காலக்கட்டத்தில் கூடுதலாக சொத்து சேர்த்திருப்பதாக எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே சத்யா பன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மேலும் ஒரு வழக்குபதிவு செய்துள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி சத்யராஜிடம் கேட்டபோது, இதுபோன்ற தகவலை யாரோ பரப்பி விடுகின்றனர். அதில் உண்மை இல்லை என்றார். அதேவேளையில் சத்யா பன்னீர்செல்வம் வீட்டிற்கு சோதனையிட வருவதற்கு முன்பு வழக்குபதிவு செய்யப்பட்ட தகவலை உறுதிபடுத்தினார்.