தலைவராக இருப்பவர்தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்: அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பேற்பது? விஜயின் தவெக கட்சிக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி
சென்னை: அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான பொதுவான விதிகளை வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், கூட்டத்தை தலைவர்தான் கட்டுப்படுத்த வேண்டும். அசம்பாவிதம் நடந்துவிட்டால் யார் பொறுப்பேற்பது என்று தமிழக வெற்றிக் கழகத்திற்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளார். கடந்த 13ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை தொடங்கிய அவர், செப்டம்பர் 20ம் தேதி முதல் டிசம்பர் 20ம் தேதி வரை ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளதாக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், த.வெ.க துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திருச்சி பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை எந்த பாரபட்சமும் இன்றி பரிசீலித்து, அனுமதி வழங்க மாநிலம் முழுவதும் உள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும். ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளின் பேரணி, பொதுக்கூட்டங்களுக்கு அவர்கள் விரும்பிய இடத்தில் காவல் துறை அனுமதி வழங்குகிறது. அதேபோல த.வெ.க.வுக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்குமாறு உத்தரவிட வேண்டும்.
கடந்த 9 மற்றும் 15ம் தேதிகளில் டிஜிபியிடம் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்து. அப்போது, த.வெ.க சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளையும், மற்ற கட்சிகள் மீது விதிக்கப்படாத நிபந்தனைகளும் த.வெ.க.வுக்கு விதிக்கப்படுகிறது. எந்த வழியாக சென்னை திரும்ப வேண்டும். எத்தனை வாகனங்கள் வர வேண்டும். கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வரக்கூடாது என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அவர்களை வர வேண்டாம் என்று நாங்கள் எப்படி சொல்ல முடியும் என்று வாதிட்டார்.
இதைக்கேட்ட நீதிபதி, அனைத்து கட்சிகளுக்கும் நிபந்தனைகள் விதிக்கப்படுவது தானே?. முழுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா?. யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல. பொதுக்கூட்டம் நடத்தினாலும் சட்டத்திற்குட்பட்டு நடத்த வேண்டும். தலைவராக இருக்கும் நீங்கள்தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். சேதப்படுத்தப்பட்ட பொது சொத்துகளுக்கான இழப்பீடு வசூலிக்கப்பட்டதா?. இல்லையென்றால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட நேரிடும். கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வர வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து மற்றவர்களுக்கு நீங்கள் முன்மாதிரியாக திகழலாமே? என்றார்.
காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ் திலக், எந்த இடத்திலும் அனுமதி மறுக்கப்படாமல், நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது. திருச்சி பரப்புரையின் போது தவெக தொண்டர்களின் செயல்களை புகைப்படங்களை பாருங்கள் என்று தெரிவித்து புகைப்படங்களை தாக்கல் செய்தார். அதனை பார்த்த நீதிபதி, இவர்கள் இது போன்று உயரமான இடங்களில் ஏறி நின்று ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது? இதனை நீங்கள் ஒழுங்குபடுத்த வேண்டாமா?.
தொண்டர்கள் மின் கம்பத்தில் ஏறி நிற்பதை நானே பார்த்தேன். எனவே, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்க வேண்டும். பொதுச்சொத்துகள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும் விதமாக ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் வகையில் விதிமுறைகளை வகுக்க வேண்டும். விதிமுறைகள் குறித்து காவல்துறை செப்டம்பர் 24ம் தேதி தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
* அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கும் அனுமதியளிக்கும்போது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும்.
* பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவதற்காக முன்கூட்டியே குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும்.