கரூர்: கமிஷன் விசாரணையில் உண்மை தெரியும் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார். கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் துபாய் பயணத்தை ரத்து செய்துவிட்டு அங்கிருந்து விமானத்தில் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கரூர் அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய பின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கரூரில் நடந்த துயரமான சம்பவம் மனதை வேதனைப்படுத்தி விட்டது. இது போன்று ஒரு சம்பவம் இனி நடக்கக்கூடாது.அரசு சார்பாக என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்துள்ளோம். பொதுமக்களுக்கும், கரூர் மாவட்ட மக்களுக்கும் வைக்கும் வேண்டுகோள் அவங்களுடைய இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு. இழப்பு இன்னும் அதிகமாக கூடாதுன்னு சொல்லி அறிவுரை கொடுத்துட்டு இருக்கிறோம். இனிமேலும் இது மாதிரி விபத்துகள் நடக்கக்கூடாது.
அதற்கு இந்த அரசு முழு நடவடிக்கை எடுக்கும் என முதலமைச்சர் கூறியுள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவு காரணமாதான் நடந்திருக்குன்னு எதிர்க்கட்சி தலைவர் சொல்லியிருக்காரு. அவரே அதே இடத்துல இரண்டு நாட்களுக்கு முன்பு தன்னுடைய பிரசாரத்தை மேற்கொண்டு இருக்கிறார். டிஜிபி அவர்கள் தெளிவாக எவ்வளவு கூட்டம் வந்ததுன்னு சொல்லியிருக்கார். எவ்வளவு அதிகமான பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கு.
எவ்வளவு தாமதமாக ஒவ்வொரு கூட்டமும் நடத்தப்பட்டு இருக்கு அப்படின்னு சொல்லியிருக்காரு. இந்த இடத்துல நான் அரசியல் பேச விரும்பல, ஓய்வு பெற்ற நீதிபதி அவங்க வராங்க, அவங்க தீர விசாரிச்சுட்டு ரிப்போர்ட் கொடுப்பாங்க, அப்போது மக்களுக்கு உண்மை தெரியும். அதன்படி சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். நான் திருப்பி சொல்கிறேன். அனைத்து தலைவர்களுக்கும் இருக்கக்கூடிய உரிமை மக்களை சந்திப்பது.
அவங்களுடைய இயக்கத்தை சேர்ந்தவங்க சந்திச்சு பேசுறது அவங்களுடைய உரிமை. அதை யாராலும் தடுக்க முடியாது. கூட்டத்தை கட்டுப்படுத்துவது அந்தந்த இயக்கத்துடைய தலைவருடைய பொறுப்பு. கட்டுக்கடங்காத கூட்டம் வரும்போது கரெக்டா டைத்துக்கு வரணும். நிறைய விஷயங்கள் இருக்கு. அவரும் வராரு. வாராவாரம் வருகிறார். உங்கள பார்த்துட்டு தான் போகிறார். பத்திரிகையாளர்கள் தயவு செய்து அவரிடம் கேள்விகளை கேளுங்க.இவ்வாறு அவர் கூறினார்.