Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இம்மானுவேல் சேகரன் பிறந்தநாள் அரசு விழா முதல்வருக்கு தலைவர்கள் நன்றி

சென்னை: இம்மானுவேல் சேகரன் பிறந்த நாள், உள்ளூர் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அவருக்கு தேவேந்திர குல வேளாளர் சங்க தலைவர்கள் நேற்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இது குறித்து மக்கள் விடுதலை கட்சி நிறுவன தலைவர் முன்னாள் எம்எல்ஏ முருகவேல்ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘சாதிமறுப்பு, சாதி ஒழிப்பு களத்திலே போராடி உயிர்த்தியாகம் செய்த தியாகிகளின் தியாகச்சுடர் போற்றப்படுவது, முதல்வர் மு.க.ஸ்டாலினால் உயர்த்தி பிடிக்கப்படுவது ஒரு நெஞ்சுரமிக்க தீரச்செயல் என்று போற்றுகிறோம். தமிழகத்தில் வாழும் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் சார்பாகவும் நன்றிகளை மீண்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.

தமிழர் விடுதலைக்களம் நிறுவன தலைவர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தியாகி இம்மானுவேல் சேகரனாரின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். முதல்வரின் முயற்சிக்கு நாங்கள் எப்போதும் தோள் கொடுப்போம்’’ என்று கூறியுள்ளார். அதேபோல, தேவேந்திரகுல மக்கள் இயக்கத் தலைவர் குமுளி ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பல ஆண்டுகளாக தேவேந்திர குல மக்கள் வைத்த கோரிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.