Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சட்டவிரோத பண பரிமாற்றம் செய்த விவகாரம் தொழிலதிபர், நகைக்கடை உரிமையாளரின் வீடுகளில் இரண்டாவது நாளாக சோதனை: பல நிறுவனங்களில் முதலீடு செய்த ஆவணங்கள் சிக்கின

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த விவகாரம் தொடர்பாக கட்டுமான நிறுவன தொழிலதிபர் ராமகிருஷ்ணா ரெட்டி மற்றும் நகைக்கடை உரிமையாளருக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக நேற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்த ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா ரெட்டி. தொழிலதிபரான இவர் மார்க் குழுமம் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனங்களில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த வருமான வரித்துறை சோதனை நடத்தினர். அதில் பல கோடி ரூபாய் பணம் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்தது தெரியவந்தது.

அதை தொடர்ந்து அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக தனியாக ராமகிருஷ்ணா ரெட்டி மற்றும் அவரது கட்டுமான நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தொழிலதிபர் ராமகிருஷ்ணா ரெட்டிக்கு சொந்தமான சைதாப்பேட்டையில் உள்ள வீடு, திருவான்மியூரில் உள்ள கட்டுமான அலுவலகம், செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த சீக்கினாங்குப்பம் என்ற பகுதியில் உள்ள மார்க் ஸ்வர்ணபூமி நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தொழிலதிபர் ராமகிருஷ்ணா ரெட்டி, முன்னாள் முதல்வரின் தோழியின் பினாமியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.  இந்த சோதனையில், தொழிலதிபர் கடந்த 2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட காலக்கட்டத்தில் பல கோடி ரூபாய் பணத்தை இவரது கட்டுமான நிறுவனத்தின் மூலம் மாற்றி கொடுத்ததற்கான ஆவணங்கள் பல சிக்கியதாக கூறப்படுகிறது. அது தொடர்பான வங்கி பணப்பரிமாற்றம் செய்த ஆவணங்களை கைப்பற்றி அமலாக்கத்துறை அதிகாரிகள் தொழிலதிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்த தங்க நகை மொத்த வியாபாரியான மோகன்லால் காத்ரி என்பவருக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள வீடு, அவரது ஜூவல்லரி கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2வது நாளாக நேற்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையில் பல்வேறு நிறுவனங்களில் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததற்கான ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 2 நாட்களாக நடந்து வரும் இந்த சோதனை முடிவில் தான் எத்தனை கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது என தெரியவரும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.