Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சட்டவிரோதமாக போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு நடிகர் கிருஷ்ணாவிடம் 8 மணிநேரத்திற்கு மேல் அமலாக்கத்துறை துருவி துருவி விசாரணை

* உங்களிடம் பணம் கொடுத்து மெத்தாம்பெட்டமின் வாங்கிய நடிகர்கள் யார் யார் என கேள்வி

* சர்வதேச முகவரான கானா நாட்டு நபருடனான தொடர்பு குறித்தும் கிடுக்குப்பிடி

சென்னை: போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 8 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பார் ஒன்றில் கடந்த மே 22ம் தேதி நடந்த அடிதடி வழக்கில் முன்னாள் அதிமுக ஐடி விங்க் நிர்வாகி பிரசாத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அதில் பிரசாத்திடம் நடத்திய விசாரணையின் போது, சினிமா நடிகர்களுக்கு மெத்தாம்பெட்டமின் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து பிரசாத் அளித்த வாக்குமூலத்தின் படி, சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமார்(எ)பிரடோ(38) மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா கானா நாட்டை சேர்ந்த ஜான்(38) என்பவரை கடந்த ஜூன் 17ம் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், சினிமா நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 2023ம் ஆண்டு முதல் 40 முறை அதாவது ரூ.4.72 லட்சத்திற்கு கொக்கைன் வாங்கி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்தனர். அவர் அவர் அளித்த தகவலின்படி மற்றொரு நடிகரான கிருஷ்ணா மெத்தாம்பெட்டமின் வாங்கி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அதன்படி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டார். இந்த போதை பொருள் வழக்கில் 2 நடிகர்கள் உட்பட 22க்கும் மேற்பட்டோர் சென்னை போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே சர்வதேச போதை பொருள் கும்பலுடன் நேரடி தொடர்பில் உள்ள கானா நாட்டை சேர்ந்த ஜான் என்பவருடன் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் பிரதீப்குமார் உதவியுடன் நேரடியாக தொடர்பு ஏற்படுத்தி கொண்டு, சினிமா பிரபலங்களுக்கு மெத்தாம்பெட்டமின், ஓ.ஜி.கஞ்சா, கொக்கைன் போன்ற போதை பொருட்கள் வாங்கி இடைத்தரகர்கள் போல் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இந்த போதை பொருள் விற்பனையில் பல லட்சம் ரூபாய் வரை நடிகர்கள் சட்டவிரோதமாக கானா நாட்டு போதை பொருள் முகவரான ஜான் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பினர். அந்த சம்மனை தொடர்ந்து நேற்று முன்தினம் நடிகர் ஸ்ரீகாந்த் நேரில் ஆஜராக வேண்டும், ஆனால் அவர் தனது உடல் நிலையை காரணம் காட்டி நேரில்ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் கிருஷ்ணா நேற்று நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த வாரம் சம்மன் அனுப்பினர். அதனை தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் கிருஷ்ணா தனது வங்கி கணக்கு ஆவணங்களுடன் நேரில் ஆஜரானார்.

அப்போது, விசாரணை அதிகாரிகள் நடிகர் கிருஷ்ணாவிடம் சர்வதேச போதை பொருள் முகவரான கானா நாட்டை சேர்ந்த ஜானை உங்களுக்கு யார் அறிமுகம் செய்து வைத்தது என்பது உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கேள்விகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டனர். அதற்கு நடிகர் கிருஷ்ணா அளித்த பதிலை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். இந்த விசாரணை நேற்று 8 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. போதை பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா அமலாக்கத்துறை விசாரணை வலையத்திற்குள் சிக்கியுள்ளதால், அவரிடம் பணம் கொடுத்து போதை பொருள் வாங்கி பயன்படுத்திய நடிகைகள் மற்றும் நடிகர்கள் தற்போது கலக்கத்தில் உள்ளனர்.